வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Sep 2020 2:24 PM GMT (Updated: 27 Sep 2020 2:24 PM GMT)

வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு அந்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார்.

சட்ட திருத்தம்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு விவசாயத்தை நிர்மூலமாக்கும் விதத்திலும், மாற்றுத்திறனாளிகள் உள்பட பல கோடி ஏழை எளிய மக்களின் உணவு பெறும் உரிமையை பாதிக்கின்ற விதத்திலும், கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு விவசாயத்தை தாரை வார்க்கும்படியான 3 அவசர மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. எனவே இதை எங்களது சங்கம் கண்டிக்கிறது. இந்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும். கோர்ட்டு அறிவுறுத்தல்படி உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் இணைக்க உரிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்“ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் அருள், தங்ககுமார், தமிழ்செல்வன், மணிகண்டன், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

Next Story