புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 27 Sep 2020 3:23 PM GMT (Updated: 27 Sep 2020 3:23 PM GMT)

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி நகரில் உள்ள கோட்டை வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவசாமி கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

தங்க கவச அலங்காரம்

அளேதர்மபுரி வரதகுப்பம் வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். செட்டிக்கரை சென்றாய பெருமாள் சாமி கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராயபெருமாள் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூக்கனூர் ஆதிமூல சாமி கோவிலில் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரியை அடுத்த அதகப்பாடியில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் உற்சவருக்கு சிறப்பு ஆராதனையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. பாலக்கோடு அருகே உள்ள பேடரஅள்ளி ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று மணியம்பாடி வெங்கட்ரமணசாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாப்பாரப்பட்டி-காரிமங்கலம்

பாப்பாரப்பட்டி அருகே உள்ள சீனிவாசபுரம் பெருமாள் கோவில், சிட்லகாரம்பட்டி நரசிம்ம சாமி கோவில், சஞ்சீவிராயன் மலைக்கோவில் ஆகிய கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதேபோல் இண்டூர் அருகே பூச்செட்டிஅள்ளி ஸ்ரீஅவரைகொட்டை பெருமாள் கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போடுவராய பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோவில், ஆட்டுக்காரம்பட்டி ராதேகிருஷ்ணா பிருந்தாவனம், காரிமங்கலத்தில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோவில், பிக்கனஅள்ளி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவில், கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை செய்து வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story