தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் மாணவ-மாணவிகள் உள்பட 80 பேருக்கு கொரோனா


தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் மாணவ-மாணவிகள் உள்பட 80 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Sept 2020 8:55 PM IST (Updated: 27 Sept 2020 8:55 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 12 மாணவ-மாணவிகள் உள்பட 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடக்க காலத்தில் குறைந்து காணப்பட்டது. தற்போது பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸ்காரர், டீச்சர்ஸ் காலனியில் வசிக்கும் போலீஸ்காரர், ஒகேனக்கல்லில் பணிபுரியும் போலீஸ்காரர், தர்மபுரி வெண்ணாம்பட்டி போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் 2 போலீஸ்காரர்கள் என மாவட்டம் முழுவதும் 5 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீல், தர்மபுரி காளியப்பன் காலனியைச் சேர்ந்த டாஸ்மாக் விற்பனையாளர், காரிமங்கலம் அருகே உள்ள எட்டியானூரை சேர்ந்த பஸ் கண்டக்டர் ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பெரிய புதூரைச் சேர்ந்த மருத்துவ பணியாளர், அரூர் சிக்கலுரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நுகர்பொருள் வாணிப கழக ஊழியர், அரூர் செட்டிபட்டியைச் சேர்ந்த ஆசிரியர், கடத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

12 மாணவ-மாணவிகள்

இதேபோன்று 12 மாணவ, மாணவிகள், ஓட்டல் பணியாளர்கள் 3 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களையும் சேர்த்து மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ளோரின் எண்ணிக்கை 2,851 ஆக அதிகரித்துள்ளது.

Next Story