திருமழபாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியது விவசாயிகள் மகிழ்ச்சி


திருமழபாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியது விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 27 Sep 2020 10:43 PM GMT (Updated: 27 Sep 2020 10:43 PM GMT)

திருமழபாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 1,400 ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் அறுவடை செய்த விவசாயிகள் திருமழபாடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் முன்பு ஒரு வார காலத்திற்கு மேலாக சாலையின் ஓரங்களில், சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு நெல்லை கொட்டி வைத்து, கொள்முதல் நிலையத்தை செயல்படுத்த கோரி காத்திருந்தனர்.

இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நெரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

செயல்பட தொடங்கியது

இதைத்தொடர்ந்து திருமழபாடியில் மீண்டும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Next Story