அம்பேத்கர் நகரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்


அம்பேத்கர் நகரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2020 1:24 AM GMT (Updated: 28 Sep 2020 1:24 AM GMT)

அம்பேத்கர் நகரில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு அம்பேத்கர் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு 300 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக அங்கு வசித்து வருவதாகவும் அப்பகுதியில் பெண்களுக்கான கழிப்பறை, சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லையாம்.

கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற முடியவில்லை.

போராட்டம்

இதனால் மழை காலங்களில் வெள்ள நீருடன், சாக்கடையும் சேர்ந்து தேங்கி கொசு உற்பத்தி ஆகி சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று அம்பேத்கர் நகரில் அடிப்படை வசதிகளை செய்து தர கூறி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story