வடுவூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலி


வடுவூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 28 Sep 2020 1:47 AM GMT (Updated: 28 Sep 2020 1:47 AM GMT)

வடுவூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் மீது டிராக்டர் ஏறியது. இதில் அவன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம், வடுவூர் மேல்பாதி செருக்கவன்னியர் தெருவை சேர்ந்தவர் அய்யாவு என்கிற செந்தில். இவர் வடுவூரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கிரிதீஷ் (வயது3). நேற்றுமுன்தினம் தந்தையும், மகனும் தென்பாதியில் உள்ள தனது உறவினரான நித்தியானந்தன் வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை நித்தியானந்தன் மகன் கோகுல் (28) என்பவர் கிரிதீசை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தென்பாதி பகுதியில் சென்று கொண்டிருந்தார். தென்பாதி ஆதிதிராவிடர் தெரு செல்லும் இணைப்பு சாலை அருகில் ராசாங்குளம் என்ற இடத்தில் அவர்கள் சென்ற போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியது.

பரிதாப சாவு

இதனால் சிறுவன் கிரிதீஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தான். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் சிறுவன் மீது ஏறி இறங்கியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய கிரிதீஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்த வடுவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேகத்தடை

தென்பாதி ஆதிதிராவிடர் தெரு செல்லும் இணைப்பு சாலைக்கு அருகில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்ததால் அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை பராமரிப்பின் போது அந்த வேகத்தடை அகற்றப்பட்டது. அதன் பிறகு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே தென்பாதி ஆதிதிராவிடர் தெரு செல்லும் இணைப்பு சாலைக்கு அருகில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story