கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 28 Sep 2020 2:46 AM GMT (Updated: 28 Sep 2020 2:46 AM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

பென்னாகரம்,

கர்நாடகா மற்றும் கேரள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து மேலும் குறைந்து நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

கோரிக்கை

இருப்பினும் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை அளவீடு செய்து வருகின்றனர். மேலும் போலீசார், தீயணைப்புத்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரிசல் ஓட்டிகள் மற்றும் மசாஜ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story