பரமத்திவேலூர் அருகே சாலையின் தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி


பரமத்திவேலூர் அருகே சாலையின் தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 28 Sep 2020 3:01 AM GMT (Updated: 28 Sep 2020 3:01 AM GMT)

பரமத்திவேலூர் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலியாகினர். நண்பர் படுகாயம் அடைந்தார்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் உசேன். இவருடைய மகன் பத்ருதீன் (வயது 20). திருச்செங்கோடு மஜித் தெருவை சேர்ந்தவர் முஸ்தபா. இவருடைய மகன் ஆஷிப் (18). அதே பகுதியை சேர்ந்தவர் முகமது பைசல். இவருடைய மகன் கலில் அகதி (20). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வேலகவுண்டம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

பரமத்திவேலூர் கட்டிபாளையம் அருகே சென்றபோது சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பியில் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த 3 பேரும் உயிருக்கு போராடினார்கள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பத்ருதீனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கும், ஆஷிப்பை திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை

மேலும் கலில் அகதியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பத்ருதீன், ஆஷிப் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த கலீல் அகதிக்கு தனியார் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் விபத்தில் பலியான சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story