எடப்பாடியில் நகர செயலாளர் வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம்


எடப்பாடியில் நகர செயலாளர் வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2020 3:08 AM GMT (Updated: 28 Sep 2020 3:08 AM GMT)

எடப்பாடியில், நகர செயலாளர் வீட்டை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி,

சேலம் மாவட்டம் எடப்பாடி நகர தி.மு.க. 26-வது வார்டு செயலாளராக முன்னாள் நகர தி.மு.க. செயலாளர் ஜெயபூபதியின் மகன் அறிவழகன் உள்ளார்.

இவரை நகர செயலாளர் பாஷா, மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் வார்டு செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டனர் என கூறி அறிவழகன் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு நகர செயலாளர் பாஷா வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது ஜெயவேல் என்ற தி.மு.க. தொண்டர் திடீரென்று அருகில் உள்ள வீட்டிலிருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து அழைத்து சென்று தண்ணீரை ஊற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எடப்பாடி போலீசார் அங்கு வந்து முற்றுகையிட்ட தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அழைத்துச் சென்றனர்.

Next Story