கிசான் திட்ட முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் பொன்முடி பேட்டி


கிசான் திட்ட முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் பொன்முடி பேட்டி
x
தினத்தந்தி 28 Sep 2020 5:43 AM GMT (Updated: 28 Sep 2020 5:43 AM GMT)

கிசான் திட்ட முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்திட வேண்டும் என்று தி.மு.க. துணை பொதுச் செயலாளர் பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் நகர தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகத்தில் எல்லோரும் நம்முடன் என்கிற உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று காலை நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான பொன்முடி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிற எல்லோரும் நம்முடன் என்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் இதுவரை 15, 000 பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் எப்படியும் 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்து விடுவோம். இதில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள். கிசான் சம்மன் நிதி உதவி என்கிற விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மட்டுமே கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. தி.மு.க. தலைவரும் கிசான் திட்ட முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கூறினார் அதனடிப்படையில் நானும் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியில் வரும் என்று கூறுகின்றேன். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர துணை செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் சர்க்கரை நன்றி கூறினர்.

Next Story