சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு நடிகை சஞ்சனா கல்ராணியிடம் அமலாக்க துறையினர் விசாரணை


சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு நடிகை சஞ்சனா கல்ராணியிடம் அமலாக்க துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 29 Sep 2020 10:34 PM GMT (Updated: 29 Sep 2020 10:34 PM GMT)

சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் சிறையிலுள்ள நடிகை சஞ்சனா கல்ராணியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

பெங்களூரு,

போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நடிகைகள் 2 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி 2 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் அவர்கள் 2 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நடிகைகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுகளே கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு சிறைக்கைதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகைகளுக்கு வீட்டு உணவை கொடுக்க கூடாது என்று சிறை காவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் நடிகைகள் 2 பேரும் சாதாரண உடை அணிந்திருந்தனர்.

அமலாக்கத்துறையினர் விசாரணை

இந்த நிலையில் நேற்று நடிகைகள் இரண்டு பேரும் கைதிகள் அடைக்கப்படும் சாதாரண சிறைக்கு மாற்றப்பட்டனர். மேலும் அவர்களுக்கு சிறை சீருடை கொடுக்கப்பட்டது. சிறை உணவும் அவர்களுக்கு கொடுக்கபட்டது.

இந்த நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், பிட்காயின் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் நேற்று சிறைக்கு சென்ற அமலாக்கத் துறையினர் நடிகை சஞ்சனா கல்ராணியிடம் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாகவும், பிட்காயின் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தினர். மேலும், அவரிடமிருந்து சில தகவல்களை பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகைகள் 2 பேரும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது தொடர்பாக கோர்ட்டு அனுமதியின் பேரில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நைஜீரிய வாலிபர்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் போதைப்பொருள் விற்றதாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று அந்த வாலிபரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி சில தகவல்களை பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story