கட்டண உயர்வை கண்டித்து மின்துறை அலுவலகங்கள் முன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


கட்டண உயர்வை கண்டித்து மின்துறை அலுவலகங்கள் முன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sep 2020 11:31 PM GMT (Updated: 29 Sep 2020 11:31 PM GMT)

கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரி மின்துறை அலுவலகங்கள் முன்பு பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்தும், இதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க. சார்பில் மின்துறை அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லாஸ்பேட்டை அசோக்நகர் சோழன்வீதியில் உள்ள மின்துறை அலுவலகம் முன்பு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தொகுதி தலைவர் சோமசுந்தரம், மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் வேல்முருகன், செயலாளர் ஜெயந்தி, மகளிர் அணி பொதுச்செயலாளர் கனகவல்லி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

தவளக்குப்பம்

தவளகுப்பம் மின்துறை அலுவலகம் எதிரே மணவெளி தொகுதி பா.ஜ.க. தலைவர் பிரகாஷ் என்கிற லட்சுமிகாந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம், விவசாய அணி பொதுச்செயலாளர் சக்தி பாலன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வடிவேல், சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வில்லியனூர் தொகுதி பா.ஜ.க. சார்பில் வி.தட்டாஞ்சாவடியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் ஆனந்தன், தொகுதி தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ராஜ்பவன்

ராஜ்பவன் சட்டமன்ற தொகுதி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி தலைவர் கணபதி தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாநில தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் ஆனந்தகண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், ஓ.பி.சி. அணியின் துணைத் தலைவர் சீனிவாசன், பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட தலைவர் நாகராஜ், இளைஞரணி தலைவர் அமல்ராஜ், தொகுதி தலைவர் விக்கி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொகுதியின் பொதுச்செயலாளர் சோமு செய்திருந்தார்.

பாகூர்

பாகூரில் உள்ள மின் அலுவலகம் முன்பு தொகுதி பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ.க. பொதுச்செயலாளர்கள் மோகனசுந்தரம், சிவராமன், மாநில துணைத்தலைவர் தங்க விக்ரமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரியாங்குப்பம் தொகுதி பா.ஜ.க. சார்பில் புறவழிச்சாலையில் உள்ள மின்துறை அலுவலகம் முன்பு தொகுதி தலைவர் செல்வகணபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்து அரியாங்குப்பம் போலீசார் அங்கு வந்து அவர் களை அப்புறப்படுத்தினர். இதேபோல் புதுவையில் அனைத்து தொகுதிகளில் உள்ள மின்துறை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நிரவி-திருமலைராயன்பட்டினம் தொகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் அருள்முருகன் கண்டன உரையாற்றினார். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் அப்துல் பாசித் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ரமேஷ் நன்றி கூறினார்.

Next Story