‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நெல்லை நயினார்குளம் கரையில் தடுப்புசுவர் கட்டும் பணி தொடங்கியது


‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நெல்லை நயினார்குளம் கரையில் தடுப்புசுவர் கட்டும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 29 Sep 2020 11:57 PM GMT (Updated: 29 Sep 2020 11:57 PM GMT)

‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்தில் நெல்லை நயினார்குளம் கரையில் தடுப்புசுவர் கட்டும் பணி தொடங்கியது.

நெல்லை,

நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகியவை புதுப்பிக்கப்படுகிறது. பொருட்காட்சி திடலில் வணிக மையம் கட்டப்படுகிறது. மேலும் நெல்லை மாநகர பகுதியில் சாலைகள் சீரமைக்கப்பட்டு புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெல்லை நயினார்குளம் ரூ.12 கோடி மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. ஏற்கனவே நயினார்குளம் புதுப்பிக்கப்பட்டு படகு விடப்படும் என்றும், அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் குளம் தூர்வாரப்பட்டு அங்கு பூங்கா கட்டிடம் கட்டப்பட்டது. மேலும் குளத்தை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டு அங்கு நவீன வகையான செங்கல்கள் பதிக்கப்பட்டன. தற்போது இவை அனைத்தும் உடைந்து சேதமடைந்து நடைபாதையில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலையில் காணப்பட்டது. மேலும் குளத்தின் கரையில் உள்ள தடுப்புச்சுவர்களும் இடிந்து விழுந்தது. குளத்தில் அமலைச்செடிகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.

தடுப்புசுவர் கட்டும் பணி

இதை சுத்தம் செய்து குளத்தை அழகுப்படுத்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் குளத்தின் கரையை சீரமைப்பது மற்றும் தடுப்புசுவர் கட்டுதல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன.

தற்போது குளத்தின் கரையில் தடுப்புசுவர் கட்டும் பணி தொடங்கியது. இதற்காக அங்கே குழிகள் தோண்டப்பட்டு, சிமெண்டு தளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Next Story