கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Sep 2020 12:00 AM GMT (Updated: 30 Sep 2020 12:00 AM GMT)

பாளையங்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலத்தில் தனியார்மயமாக்கலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைதான தொழிற்சங்க தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச. நடராஜன் தலைமை தாங்கினார். இதில் சம்மேளன நிர்வாகி பெருமாள்சாமி, மின்ஊழியர் மத்திய அமைப்பு வண்ணமுத்து, பொறியாளர் சங்க மணிவாசகம், பொறியாளர் யூனியன் ராமர், ஐக்கிய சங்கம் தென்கரை மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை கோட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்தையா முன்னிலை வகித்தார். ஒவ்வொரு ஊழியரும் தபால் வங்கி கணக்குக்கு ஆட்களை சேர்க்க கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், 100 நாட்கள் வேலை செய்யும் அப்பாவி கிராம மக்களை புதிய கணக்கு தொடங்கும்படி கூறி தொல்லை கொடுப்பதை நிறுத்த வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் சிபாரிசுகளை ஏற்று உடனடியாக ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கோட்ட செயலாளர் ஞான பால்சிங், பொருளாளர் நம்பி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கையெழுத்து இயக்கம்

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் தேசிய கல்வி கொள்கை ஆதரவு கூட்டமைப்பு சார்பில் தேசிய கல்விக்கொள்கையை ஆதரித்து நேற்று பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்ட அமைப்பாளர் மாதவன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் பால்வண்ணன், சுப்பிரமணியன், ஹரிகரன், செல்லப்பா, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேசிய கல்விக்கொள்கையை ஆதரித்து வருகிற 5-ந்தேதி வரை பொதுமக்களிடம் இருந்து 1 கோடி கையெழுத்து பெற்று, அதனை 8-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வழங்க இருப்பதாக தெரிவித்தனர்.

Next Story