ஆரேகாலனி போராட்டக்காரர்கள் மீதான வழக்கு வாபஸ் உள்துறைக்கு, உத்தவ் தாக்கரே உத்தரவு


ஆரேகாலனி போராட்டக்காரர்கள் மீதான வழக்கு வாபஸ் உள்துறைக்கு, உத்தவ் தாக்கரே உத்தரவு
x
தினத்தந்தி 30 Sep 2020 9:26 PM GMT (Updated: 30 Sep 2020 9:26 PM GMT)

ஆரேகாலனி போராட்டக்காரர்கள் மீதான வழக்கை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கமாறு உள்துறைக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

மும்பையில் பசுமை நிறைந்த பகுதி ஆரேகாலனி. கடந்த தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் இப்பகுதியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மரங்களை வெட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது வழக்குகள் பாய்ந்தன. ஆனால் ஆப்போது ஆட்சியில் அங்கம் வகித்த சிவசேனா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை எதிர்த்தது.

ஆத்திய தாக்கரே கோரிக்கை

மேலும் ஆட்சிபொறுப்பை ஏற்றுக்கொண்ட சமயத்தில் ஆரே காலனி போராட்டக்காரர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என சிவசேனா உறுதி அளித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தின்போது ஆலேகாலனி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை சுற்றுச்சூழல் மந்திரி ஆதித்ய தாக்கரே முன்வைத்தார். துணை முதல்-மந்திரி அஜித் பவார் மற்றும் பிற மந்திரிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆரேகாலனி போராட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர்கள் மீதான வழக்கை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு உள்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த தகவலை முதல்-மந்திரி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் உறுதிப்படுத்தி உள்ளது.

Next Story