பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: நெல்லை ரெயில் நிலையம், கோவிலில் பலத்த பாதுகாப்பு


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: நெல்லை ரெயில் நிலையம், கோவிலில் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 30 Sep 2020 11:25 PM GMT (Updated: 30 Sep 2020 11:25 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி நெல்லை ரெயில் நிலையம், கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நெல்லை,

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் மத்திய மந்திரிகள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.

இதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வாகன காப்பகங்கள், முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் நிலையத்தில் சோதனை

மேலும் புதிதாக வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. குறிப்பாக, கார்களில் வந்தவர்களின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நெல்லை மாநகர பகுதியில் கூடுதலாக 12 வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. சந்தேகப்படும்படியான நபர்களை பலத்த சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

1,000 போலீசார்

இதுகுறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், ‘நெல்லை மாவட்டத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பொது இடங்களில் ஒன்றுகூடி பட்டாசு வெடிக்கவோ, இனிப்புகள் வழங்கவோ அனுமதி இல்லை. பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.

நெல்லை மாநகர பகுதியில் மட்டும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story