காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு விவரங்களை 9-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு விவரங்களை 9-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2020 12:16 AM GMT (Updated: 1 Oct 2020 12:16 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு விவரங்களை வருகிற 9-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு அனைத்து கட்சியினருக்கான கருத்து கேட்பு கூட்டத்தில் கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடா்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் பொன்னையா பேசியதாவது:-

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் அனைத்தும் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வருகிற 31 -ந் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

நகா்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளா்களை கொண்ட வாக்குச்சாவடி மையங்கள் களப்பணியின் மூலம் கண்டறிந்து அவற்றிலிருந்து புதிய வாக்குச்சாவடிகளைப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 4,123 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள 66 வாக்குச்சாவடிகளை புதிதாக அமைப்பதற்கான முன்மொழிவை சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ளோம்.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடா்பான கோரிக்கைகளை கலெக்டர் அலுவலகத்துக்கு வருகிற 9-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். வரைவு வாக்காளா் பட்டியல் வரும் நவம்பா் மாதம் 16-ந் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடா்ந்து, வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பட்டியலை அனைத்து கட்சி பிரமுகா்களுக்கும் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், காஞ்சீபுரம் சப்- கலெக்டர் சரவணன், ஸ்ரீபெரும்புதூா் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) நாராயணன், காஞ்சீபுரம் நகராட்சி ஆணையா் மகேஸ்வரி, அ.தி.மு..க மாவட்ட செயலாளர்கள் வி.சோமசுந்தரம், திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஸ்ரீபெரும்புதூர் எம்..எல்..ஏ. மதனந்தபுரம் கே.பழனி, முத்தியால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ. சேகர், காங்கிரஸ் சார்பில் மாவட்ட செயலர் ஜி.வி.மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேரு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story