அந்தியூர், சென்னிமலை போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சம்


அந்தியூர், சென்னிமலை போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
x
தினத்தந்தி 1 Oct 2020 8:22 PM GMT (Updated: 1 Oct 2020 8:22 PM GMT)

அந்தியூர், சென்னிமலை போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடியினர் தஞ்சம் அடைந்தனர்.

ஈரோடு,

அந்தியூர் அருகே உள்ள பழைய ராசாங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். அவருடைய மகள் மகாலட்சுமி (வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். அவருடைய மகன் மணிகண்டன் (28). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்த பஸ்சில் மகாலட்சுமி தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இதனால் அவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்தது. இதற்கு மகாலட்சுமியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து மணிகண்டனும், மகாலட்சுமியும் வீட்டை விட்டு வெளியேறினர்.

போலீசில் தஞ்சம்

பின்னர் அந்தியூர் பெருமாள் கோவிலில் 2 பேரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி 2 பேரது பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மகாலட்சுமியின் வீட்டில் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மணிகண்டனின் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டன் மகாலட்சுமியை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

சென்னிமலை

சென்னிமலையில் ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்தவர் சின்ராஜ். அவருடைய மகன் சூர்யா (வயது 21). ஈரோடு அருகே பெரியசேமூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். அவருடைய மகள் ஹர்ஷினி (வயது 20). சூர்யாவும், ஹர்ஷினியும் பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தபோது பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேரது வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் ஹர்ஷினிக்கு வீட்டில் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் சூர்யாவும், ஹர்ஷினியும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம் சிவன்மலையில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சென்னிமலை போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் ஹர்ஷினியின் பெற்றோர் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சின்ராஜ் சூர்யாவையும், ஹர்ஷினியையும் தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

Next Story