அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலை கட்டங்குடி விலக்கில் தொடர் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலை கட்டங்குடி விலக்கில் தொடர் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 2 Oct 2020 4:53 AM GMT (Updated: 2 Oct 2020 4:53 AM GMT)

அருப்புக்கோட்டை 4 வழிச்சாலையில் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துகளை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் இருந்து கட்டங்குடி கிராமத்துக்கு நான்கு வழிச்சாலை விலக்கை கடந்து தான் செல்ல முடியும். இப்பகுதி வழியாக சின்னகட்டங்குடி, தாதம்பட்டி, எரம்பட்டி, பி.தொட்டியங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

அருப்புக்கோட்டை முக்கிய வியாபார ஸ்தலமாக இருப்பதால் பல்வேறு கிராம மக்கள் நான்கு வழிச்சாலையை கடந்து அருப்புக்கோட்டைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வர். கிராமங்களில் அறுவடை செய்யப்படும் விளை பொருட்களையும் 4 வழிச்சாலையை கடந்துதான் நகருக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்வர்.

மேலும் பாளையம்பட்டி அருகில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி நிறுவனம், தொழிற்பயிற்சி பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொய்யாங்குளம், மேட்டு தொட்டியாங்குளம் கிராமத்திற்கு செல்லும் பொதுமக்களும் இந்த கட்டங்குடி நான்கு வழிச் சாலையை கடந்து தான் சென்று வருகின்றனர்.

மதுரையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் அதிகமான வேகத்தில் கடந்து செல்லும். அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து கட்டங்குடி விலக்கு சாலையை கடந்து செல்வோர் விபத்துகளில் சிக்கி உயிர் பலி ஏற்படுகிறது.

மேலும் அப்பகுதியில் உயர் மின் விளக்குகள் இல்லாததால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து உள்ளது. இதனால் அதிவேகமாக வரும் வாகனங்களால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது.

எனவே தொடர் விபத்துகளை தடுக்க கட்டங்குடி நான்குவழிச்சாலையில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டியது அவசியமாகும். மேலும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சாலையின் இரு பக்கமும் தடுப்புகளை அமைக்கவும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story