பெரம்பலூர், அரியலூரில் காந்தி ஜெயந்தி விழா


பெரம்பலூர், அரியலூரில் காந்தி ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 3 Oct 2020 5:42 AM GMT (Updated: 3 Oct 2020 5:42 AM GMT)

பெரம்பலூர், அரியலூரில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் அரியலூர் புதிய மார்க்கெட் தெருவில் உள்ள கதர் அங்காடி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் காந்தி உருவப்படத்தினை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கலெக்டர் ரத்னா, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோரும் காந்தி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், தீபாவளி பண்டிகையையொட்டி கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.

மேலும் அவர், கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒரு களப்பணி ஆய்வாளருக்கும், பாரத பிரதமரின் சாலையோர வியாபாரிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 குழு தலைவர்களுக்கும் சால்வை அணிவித்து கவுரவித்தார். இதில் நகராட்சி ஆணையர் குமரன், உதவி இயக்குனர் (கதர் கிராம தொழில்கள்) செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் சாந்தா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் சாந்தா பழைய பஸ் நிலையத்தில் உள்ள கதர் விற்பனை அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் குமரிமன்னன், காதி விற்பனை மேலாளர் இளங்கோவன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பிறந்த நாளை முன்னிட்டு காந்தியின் சிலைக்கும், நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜர் சிலைக்கும் பெரம்பலூரில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கல்வி மாவட்ட சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பாக உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலரும் சாரண, சாரணிய இயக்கத்தின் முதன்மை ஆணையருமான பாலசுப்ரமணியம் வழிகாட்டுதலின்படி நேற்று ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உடையார்பாளையம் கல்வி மாவட்ட சாரண ஆணையர் மோகன் தலைமை தாங்கினார். இயக்கத்தின் துணை தலைவர் முத்துக்குமரன் மற்றும் உடையார்பாளையம் கல்வி மாவட்ட சாரண இயக்க செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தி சாரண, சாரணிய மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மாணவர்கள், சாரணிய ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பர் தலைமையில் சாரண, சாரணிய மாணவர்கள் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். கொரோனா காரணமாக குறைவான மாணவர்களுடன் சமூக இடைவெளியை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காந்தியடிகள் பற்றிய சுவையான செய்திகள் கூறப்பட்டு, அவரது கொள்கைகளை கடைப்பிடிக்க உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

ஆண்டிமடம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற விழாவில் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் வட்டார காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story