அ.தி.மு.க.வில் ஒருபோதும் பிளவு ஏற்படாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


அ.தி.மு.க.வில் ஒருபோதும் பிளவு ஏற்படாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 4 Oct 2020 12:32 AM GMT (Updated: 4 Oct 2020 12:32 AM GMT)

அ.தி.மு.க.வில் ஒருபோதும் பிளவு ஏற்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் பாலகங்கா, பகுதி செயலாளர் வீரமணி, அ.தி.மு.க. நிர்வாகி கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் அரசு வகுத்த வழிமுறைகளை கடைபிடித்துதான் நடத்தினோம். ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தை காரணம் காட்டி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்கிறார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் கிராம சபை கூட்டத்தை தவிர்ப்பதன் மூலம் கொரோனா நோய் தொற்றைத்தடுக்க முடியும். ஆனால் எனக்கு சட்டம் கிடையாது என ஸ்டாலின் செயல்படுவது ஜனநாயகத்தில் எப்படி சரியாக இருக்கும். சட்டங்களை மதிப்பதுதான் சிறந்த எதிர்க்கட்சிகளின் கடமையாக இருக்க முடியும். சட்டத்தை மதிக்காமல் ஸ்டாலின் தடையை மீறி செயல்பட்டது குற்றமே.

வரும் 6-ந்தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்துக்கு வரவேண்டும் என்ற அழைக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் தவறானது. அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளை பரப்பி விட்டு எதிரிகள், துரோகிகள் குளிர்காய நினைக்கின்றனர்.

மக்களை பொறுத்தவரை மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிதான் வேண்டும் என நினைக்கின்றனர். பூகம்பம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் அ.தி.மு.க.வில் ஒருபோதும் எந்த பிளவும் ஏற்படாது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story