திருவள்ளூரில் டெங்கு தடுப்பு ஆய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது


திருவள்ளூரில் டெங்கு தடுப்பு ஆய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 5 Oct 2020 12:27 AM GMT (Updated: 5 Oct 2020 12:27 AM GMT)

திருவள்ளூரில் டெங்கு தடுப்பு ஆய்வு கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி துறை போன்ற துறைகள் சார்பாக டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் இதர காய்ச்சலை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை மற்றும் ஊரக உள்ளாட்சி துறை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி துறை மூலமாக அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் புகை மருந்து தெளிப்பான் பணிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சிறு மின்விசை பம்பு தொட்டிகள் வாரம் ஒருமுறை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். குடிநீரை குளோரினேசன் செய்து வழங்க வேண்டும், ஊரக உள்ளாட்சி பகுதிகள், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் ஒட்டுமொத்த குப்பைகளை அகற்றுதல் வேண்டும். டெங்கு, மஸ்தூர் மற்றும் இதர சுகாதார பணியாளர்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகளை கண்காணிக்க நகராட்சி, மாநகராட்சி, தடுப்பு கண்காணிப்பு குழு 10, பேரூராட்சி தடுப்பு கண்காணிப்பு குழு 6 மற்றும் கிராம நகராட்சி தடுப்பு கண்காணிப்புக்குழு உள்ளிட்ட 29 குழுக்களும், துணை கலெக்டர், உதவி இயக்குனர் நிலையில் 58 பேர் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்ட மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் தடுக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வு செய்து தினந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story