தஞ்சை மாவட்டத்தில் 180 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு தினமும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை


தஞ்சை மாவட்டத்தில் 180 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு தினமும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2020 4:49 AM GMT (Updated: 5 Oct 2020 4:49 AM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 180 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தினமும் 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 58 ஆயிரத்து 948 எக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எக்டேரில் குறுவை நெல் அறுவடை முடிவடைந்துள்ளது. தொடர்ந்து அறுவடை பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நெல், கொள்முதல் பருவம் அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி அடுத்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 1-ந் தேதி நேரடி நெல் கொள்முதல் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவ்வப்போது மழையும் பெய்து வந்ததால் சில இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் முளைத்தன.

இதனால் உடனே கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் 227 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.

நேற்று முதல் தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் முதல்நாளில் 180 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தஞ்சை கரந்தை பூக்குளம், களிமேடு ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பூஜை செய்யப்பட்டு, கொள்முதல் பணி தொடங்கப்பட்டது.

நேற்று 500 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டன. 1 வாரத்திற்கு தினமும் 1,000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், ஈரப்பதத்தை தளர்த்தி 20 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், மழைக்கு முன்பாக அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சிற்றரசு கூறும்போது, 227 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்த பகுதியில் நெல் அதிகமாக குவிந்து இருக்கிறதோ? அந்த பகுதிகளில் முக்கியத்துவம் கொடுத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. 180-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும்.

நாளைக்குள்(அதாவது இன்று) எல்லா கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும். மேலும் எங்கு தேவைப்பட்டாலும் அங்கு கொள்முதல் நிலையம் திறக்க தயாராக இருக்கிறோம். ஒரு நாளைக்கு 1,000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய சொல்லி இருக்கிறோம். நெல் வரத்து குறைவான இடங்களில் 500 முதல் 800 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. மழைக்கு முன்பாக அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story