மும்பை மாநகராட்சியிடம் இழப்பீடு கேட்டு நடிகை கங்கனா தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிந்தது தீர்ப்பு ஒத்திவைப்பு


மும்பை மாநகராட்சியிடம் இழப்பீடு கேட்டு நடிகை கங்கனா தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிந்தது தீர்ப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 5 Oct 2020 9:13 PM GMT (Updated: 5 Oct 2020 9:13 PM GMT)

மும்பை மாநகராட்சியிடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு நடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மும்பை போலீசாரை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார். இதையடுத்து அவருக்கும், மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் 9-ந் தேதி பாந்திரா பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனாவின் பங்களா வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்ததால் வீடு இடிக்கப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.

இதை எதிர்த்து நடிகை கங்கனா மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அரசியல் உள்நோக்கத்துடன் தனது வீடு இடிக்கப்பட்டதாக கூறினார். மேலும் வீடு இடிக்கப்பட்டதற்கு ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு இருந்தார்.

விசாரணை முடிந்தது

ஆனால் சட்டவிதிகளுக்கு உட்பட்டே நடிகை கங்கனாவின் வீடு இடிக்கப்பட்டதாக மாநகராட்சி வாதிட்டது. மேலும் நடிகையின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியது.

இந்தநிலையில் வீடு இடிக்கப்பட்ட சம்பவத்தில் மாநகராட்சிக்கு எதிராக நடிகை கங்கனா தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிந்து உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் காதவாலா, ஆர்.ஐ. சக்லா ஆகியோர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

Next Story