நெல்லையில் காங்கிரசார் தர்ணா போராட்டம்


நெல்லையில் காங்கிரசார் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2020 11:29 PM GMT (Updated: 6 Oct 2020 11:29 PM GMT)

நெல்லையில் காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலையில் நெல்லை கொக்கிரகுளம் காங்கிரஸ் அலுவலகம் முன்பு சத்தியாகிரக தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரப்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தியிடம் காவல் துறையினர் நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.

கருப்பு துணி

இதில் கலந்து கொண்டவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி இருந்தனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து காந்தி, அம்பேத்கர் வேடம் அணிந்து வந்தவர்களிடம் மனுக்கொடுத்தனர். போராட்டத்தில் சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, மாநில வக்கீல் அணி துணை தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிவாரண நிதி

தர்ணா போராட்டத்தில் தனுஷ்கோடி ஆதித்தன் கூறுகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை அவமதித்த காவல்துறையும், உத்தரபிரதேசம் அரசும் மன்னிப்பு கேட்க வேண்டும். கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரண நிதியும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். காவல்துறையினர் உடனே மன்னிப்பு கேட்கவில்லை என்றால் காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Next Story