காரைக்குடி அருகே கல்லல் ரெயில் நிலையத்தில் உயர்மட்ட நடைபாதை அமைக்கும் பணி தீவிரம்


காரைக்குடி அருகே கல்லல் ரெயில் நிலையத்தில் உயர்மட்ட நடைபாதை அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 7 Oct 2020 12:43 PM GMT (Updated: 7 Oct 2020 12:43 PM GMT)

காரைக்குடி அருகே கல்லல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் உயர்மட்ட நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கல்லல்,

காரைக்குடி அருகே உள்ள கல்லல் பகுதியை சுற்றி அரண்மனை சிறுவயல், குருந்தம்பட்டு, சொக்கநாதபுரம், பாகனேரி, நடராஜபுரம், நாட்டரசன்கோட்டை, கண்டுப்பட்டி உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதுதவிர காளையார்கோவில், மறவமங்கலம் உள்ளிட்ட பகுதி மக்களும் ரெயில் மூலம் திருச்சி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டுமானால் கல்லல் ரெயில் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும்.

இதுதவிர கல்லல் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில் மூலம் செல்ல வேண்டுமானால் இந்த ரெயில் நிலையத்திற்கு வந்து தான் செல்ல வேண்டும். இவ்வாறு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு வந்து ரெயில்களில் சென்று வருவது வழக்கமாக இருந்து வந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ரெயில் நிலையத்தில் சரியான குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் ரெயில் தண்டவாளத்தை கடப்பதற்கான உயர்மட்ட நடைபாதை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்த ரெயில் நிலையத்தில் மொத்தம் 4 தண்டவாளங்களும், 3 பிளாட்பாரங்களும் உள்ளன.

இந்தநிலையில் இந்த ரெயில் நிலையத்தில் பல ஆண்டுகளாக உயர்மட்ட நடைபாதை இல்லாததால் ரெயிலில் இருந்து இறங்கும் பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடந்து நுழைவுவாயிலுக்கு சென்று தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதனால் முதியோர், பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகள், கர்ப்பிணிகள் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல சிரமம்அடைந்து வந்தனர். இதையடுத்து இந்த ரெயில் நிலையத்தில் உயர்மட்ட நடைபாதை அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்டநாட்களாக தென்னக ரெயில்வே நிலையத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தென்னக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தற்போது ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரம் அருகில் உயர் மட்ட நடைபாதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது மேல்மட்ட பாதை பணி அமைக்கப்பட்டு படிக்கட்டுகள் முற்றிலும் அமைக்கப்பட்டு மேல்மட்ட தரைதளத்தில் கூரைகளும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெல்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்த பணிகள் முற்றிலும் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லல் ரெயில் நிலையத்தில் நீண்டநாட்களாக உயர்மட்ட நடைபாதை இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த பணி நடைபெற்று வருவதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story