பேரூராட்சி பகுதியில் 100 நாட்கள் வேலையை விரிவுபடுத்தக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பேரூராட்சி பகுதியில் 100 நாட்கள் வேலையை விரிவுபடுத்தக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2020 5:39 PM GMT (Updated: 7 Oct 2020 5:39 PM GMT)

பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாட்கள் வேலையை விரிவுபடுத்தக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆறுமுகநேரி,

ஆத்தூர் நகரப்பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலையின்மையின் நெருக்கடியில் உள்ள பேரூராட்சி மக்களுக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் குழு பரிந்துரையை ஏற்று பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாட்கள் வேலையை விரிவுபடுத்த வேண்டும், தினக்கூலி 600 ரூபாய் வழங்க வேண்டும், கொரோனா கால நிவாரணமாக குடும்பத்திற்கு 7500 ரூபாய் வழங்க வேண்டும், 60 வயதை கடந்த அனைவருக்கும் ஓய்வூதியம் 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க ஒன்றிய தலைவர் தேவாரம் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட உதவி தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் சண்முகராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், சி.ஐ.டி.யு.சி திருக்காளத்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எட்டயபுரம்-சாத்தான்குளம்

எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. கன்வீனர் செல்வகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் நடராஜன், முருகேசன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சிவா, மாரிமுத்து, தனபால், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெயபால் வரவேற்றார். வட்ட பொருளாளர் சுந்தர கணபதி விளக்க உரை ஆற்றினார். துணை தலைவர் முருகன் நன்றி கூறினார். நிர்வாகிகள் ப்ளோரா ராணி, லட்சுமி, பார்வதி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரூராட்சி தலைமை எழுத்தர் ஜெரோமிடம் மனு கொடுத்தனர்.

Next Story