கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Oct 2020 5:51 PM GMT (Updated: 8 Oct 2020 5:51 PM GMT)

கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீனிவாச நகரில் குடியிருப்பு மற்றும் அங்குள்ள அரசு தொடக்க பள்ளிக்கு அருகில் தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி செய்தது.

அதனை பொதுமக்கள் தடுத்து நிறுத்திய காரணத்தாலும், இனாம்மணியாச்சி பஞ்சாயத்து நிர்வாகம் தீர்மானத்தின் மூலம் செல்போன் கோபுரம் அமைக்க தடை செய்ததாலும் தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் இருந்தது.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் மீண்டும் பணிகளை தொடங்க இருப்பதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு, மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் சீனிவாசன் நகர் செல்போன் கோபுரம் எதிர்ப்பு குழு தலைவர் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீனிவாச நகர் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.

அதனை தொடர்ந்து உதவி கலெக்டர் அலுவலக உதவியாளர் நிஷாந்தினியிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story