பிரபல டி.வி. சேனல்கள் மோசடி மும்பை போலீஸ் விசாரணையில் அம்பலம்


பிரபல டி.வி. சேனல்கள் மோசடி மும்பை போலீஸ் விசாரணையில் அம்பலம்
x
தினத்தந்தி 8 Oct 2020 9:49 PM GMT (Updated: 8 Oct 2020 9:49 PM GMT)

மும்பையில் பிரபல டி.வி. சேனல்களில் டி.ஆர்.பி. ரேட்டிங் மோசடி நடந்து இருப்பதாகவும், இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மும்பை போலீஸ் கமிஷனர் கூறினார்.

மும்பை,

டி.வி. சேனல்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (பி.ஏ.ஆர்.சி.) கணக்கிட்டு வருகிறது.

இந்தநிலையில் மும்பையில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறையில் மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடித்து உள்ளனர். மேலும் இந்த மோசடியில் பிரபல ஆங்கில செய்தி சேனல் உள்ளிட்ட சில சேனல்கள் ஈடுபட்டுள்ளதாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீா் சிங் தெரிவித்து உள்ளார்.

மராத்தி சேனல்கள்

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

மும்பை குற்றப்பிரிவு போலீசார் டி.ஆர்.பி. ரேட்டிங் மோசடியில் ஈடுபட்டதாக 2 மராத்தி சேனல் உரிமையாளர்களை கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் ரிபப்ளிக் ஆங்கில செய்தி சேனலும் ஈடுபட்டுள்ளது. இந்த சேனலை சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பணம் கொடுத்து மோசடி

மோசடியில் ஈடுபட்டவர்கள் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து சில இடங்களில் டி.வி.யை அவர்கள் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் ஆன் செய்து குறிப்பிட்ட சேனல்களை வைக்க சொல்லி உள்ளனர். இந்த மோசடி தொடர்பாக பி.ஏ.ஆர்.சி. ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்படும். மும்பையில் சேனல்களில் டி.ஆர்.பி.யை கணக்கிட 2 ஆயிரம் பாரோ மீட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதை கண்காணிக்கும் பணிக்காக ஹன்சா என்ற நிறுவனம் பி.ஏ.ஆர்.சி.யால் நியமிக்கப்பட்டுள்ளது. மோசடி தொடர்பாக ஹன்சா நிறுவனம்தான் புகார் அளித்து உள்ளது. அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் ஒருவரிடம் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவரது வங்கி லாக்கரில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சேனல் நிர்வாகம் மறுப்பு

இந்தநிலையில் மும்பை போலீஸ் கமிஷனரின் குற்றச்சாட்டை ரிபப்ளிக் செய்தி சேனல் நிறுவனம் மறுத்து உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என அந்த சேனலின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோசுவாமி தெரிவித்து உள்ளார்.

Next Story