புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப்பின் பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்


புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப்பின் பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்
x
தினத்தந்தி 8 Oct 2020 11:05 PM GMT (Updated: 8 Oct 2020 11:05 PM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆர்வமுடன் வந்த மாணவ, மாணவிகள் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பிளஸ்-2 தேர்வுகள் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு கல்லூரி மாணவர்கள் தவிர மற்ற அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றனர்.

அடுத்தடுத்து மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்து வந்தன. 2020-21 கல்வியாண்டு தொடங்கிய நிலையில் தற்போது மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கட்டாயம் இல்லை

இந்தநிலையில் மத்திய அரசு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவர் களுக்கு தங்களது பாடங்களில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகவே வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இந்த வகுப்புகளுக்கு விரும்பினால் மட்டுமே வரலாம். கட்டாயத்தின்படி வரத் தேவையில்லை. பெற்றோர்களின் விருப்பத்தின்படியே பள்ளிகளுக்கு வர வேண்டும். அதுதொடர்பாக பெற்றோரிடம் இருந்து கடிதம் வாங்கி வரவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன்படி புதுவை மாநிலத்தில் முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று புதுவை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இரு குழுக்களாக பிரித்து வாரத்தில் 3 நாட்கள் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவது, பள்ளிகளுக்கு மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். வருகைப்பதிவேடு முறை பின்பற்றப்பட மாட்டாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

கடும் எதிர்ப்பு

இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக ஆளும் காங்கிரசின் கூட்டணி கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகியவை எதிர்த்தன. கொரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளிப் போட வேண்டும். மாணவர்களின் உயிருடன் விளையாடக் கூடாது என வற்புறுத்தின. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பள்ளிகளை திறப்பதிலேயே அரசு குறியாக இருந்தது.

இதையொட்டி கடந்த சில தினங்களாக பள்ளிகளில் தூய்மைப்பணிகள் நடந்தன. வகுப்பறைகளை சுத்தம் செய்வது, கிருமிநாசினி தெளிப்பது, மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமரும் விதமாக இருக்கைகளை அமைப்பது போன்ற பணிகள் செய்யப்பட்டன.

பள்ளிகள் திறப்பு

இதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான நேற்று 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். அங்கு அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து பெற்றோரின் ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டன.

அதன்பின் உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி மூலம் பரிசோதித்து விட்டு கிருமிநாசினி வழங்கி அதன்பிறகே வகுப்பறைக்குள் செல்ல மாணவர்களை ஆசிரியர்கள் அனுமதித்தனர். வகுப்பறையில் ஒரு பெஞ்சில் 2 பேர் அமரவைக்கப்பட்டனர். ஒரு பெஞ்சுக்கும் அடுத்த பெஞ்சுக்கும் இடையே போதுமான இடைவெளியும் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வம்

நகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகை என்பது 60 முதல் 80 சதவீதம் வரை இருந்தது. கிராமப்புற பள்ளிகளில் இது 40 முதல் 60 சதவீதமாக இருந்தது. குறிப்பாக தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் வந்து இருந்தனர். இது அவர்களது ஆர்வத்தை காட்டியது. திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திரு.வி.க. அரசு உயர்நிலைப்பள்ளி, மணிமேகலை அரசு பள்ளிகளில் அதிகமான எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் வந்து இருந்தனர்.

நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ரகவுடு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று சுமார் 76 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பாடங்களில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள விருப்பத்தின் பேரில் பெற்றோர் அனுமதி கடிதத்துடன் சென்றனர். முதல் நாளான நேற்று, குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்தனர்.

நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முககவசம், கைகளை தூய்மைப்படுத்திய பின்னரே பள்ளிகளுக்குள் செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதாவது வாரத்தில் 3 நாட்கள் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘பாதுகாப்பு முக்கியம்’

பள்ளிகள் திறப்பு தொடர்பாக கல்வி துறை இயக்குனர் ருத்ரகவுடு கூறியதாவது:-

பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு வந்துள்ளனர். பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை பெற்ற பின்னரே மாணவர்களை வகுப்பில் அனுமதித்துள்ளோம். மாணவர்களின் பாதுகாப்புதான் முதலில் எங்களுக்கு முக்கியம். பள்ளிகளில் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகை நன்றாக உள்ளது. தனியார் பள்ளிகளில் அந்த அளவுக்கு மாணவர்கள் வரவில்லை. மாணவர்களை பள்ளிக்கு வரவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்கள் விருப்பத்தின்பேரில் மட்டும்தான் வரவேண்டும். நகர் பகுதியை ஒப்பிடும் போது, கிராமப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது.

இவ்வாறு ருத்ரகவுடு கூறினார்.

Next Story