சோழிங்கநல்லூரில் ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது


சோழிங்கநல்லூரில் ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2020 11:32 PM GMT (Updated: 8 Oct 2020 11:32 PM GMT)

சோழிங்கநல்லூரில் ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோழிங்கநல்லூர்,

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் அறிவுரையின் பேரில் தெற்கு மண்டல இணை கமிஷனர் பாபு வழிகாட்டுதல்படி, அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் செம்மஞ்சேரி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சோகன்லால் (வயது 38) செம்மஞ்சேரி வீட்டு வசதி வாரிய பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாக கூறிக்கொண்டு, அரசால் தடைச்செய்யப்பட்ட புகையிலை பொருட் களை செம்மஞ்சேரி பகுதியில் உள்ள கடைகளில் வினியோகம் செய்தது தெரியவந்தது. அவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்ததில் அவருக்கு தாழம்பூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (38) என்பவர் புகையிலை பொருட் களை வினியோகம் செய்தது தெரியவந்தது.

2 பேர் கைது

தனிப்படையினர் தாழம்பூரிலுள்ள ஜெயராஜ் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடைச்செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் அவரிடம் விசாரித்ததில் சிறுசேரி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் தீப்பெட்டி குடோன் வைத்து தீப்பெட்டி வியாபாரம் செய்வது போல் பெங்களூருவில் இருந்து இடைத்தரகர் மூலம் புகையிலை பொருட் களை கடத்தி வந்து தன்னுடைய வீட்டையே குடோனாக மாற்றி பதுக்கி வைத்திருந்ததும், தீப்பெட்டி பண்டல்களை ஏற்றி இறக்குவது போன்று வெளிதோற்றத்தை ஏற்படுத்தி புகையிலை பொருட்களை பல இடங்களில் திருட்டுத்தனமாக வினியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 400 கிலோவுக்கு மேற்பட்ட தடைச்செய்யப்பட்ட புகையிலை பொருட் களை கைப்பற்றினர்.

Next Story