தென்காசி மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்


தென்காசி மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2020 11:47 PM GMT (Updated: 9 Oct 2020 11:47 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடையடைப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி,

திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் 12 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனைக் கண்டித்தும், இந்த வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்காசி மாவட்டத்தில் நேற்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களது கடைகளை அடைத்து, தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பண்டார சிவன், பொருளாளர் முத்தையா மற்றும் நிர்வாகிகள் முருகேசன், இசக்கி ராஜ், மாரியப்பன், ஆடிட்டர் முருகன், சம்போ முருகன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள், தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.

ஆலங்குளம்

இதேபோல், ஆலங்குளத்தில் உள்ள அனைத்து முடிதிருத்தும் கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து ஆலங்குளம் மருத்துவ சங்க தலைவரும், விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி அவைத்தலைவருமான மகேஷ் கூறுகையில், ‘திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் கைதானவர் விடுதலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அந்த சிறுமிக்கு நடந்த கொடூரம் வேறு யாருக்கும் நடக்காத வண்ணம் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அந்த சிறுமிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்‘ என்றார்.

இதேபோல் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், அச்சன்புதூர், வடகரை, சொக்கம்பட்டி, இடைகால் உள்பட மாவட்டம் முழுவதும் முடிதிருத்தும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story