ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் மீது புகார்: டி.ஜி.பி. அலுவலகம் முன் குழந்தையுடன் பெண் திடீர் போராட்டம்


ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் மீது புகார்: டி.ஜி.பி. அலுவலகம் முன் குழந்தையுடன் பெண் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2020 10:36 PM GMT (Updated: 12 Oct 2020 10:36 PM GMT)

ஐ.ஆர்.பி.என். போலீஸ் காரர் மீது புகார் தெரிவித்து டி.ஜி.பி. அலுவலகம் முன் குழந்தையுடன் பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை கொம்பாக்கம்பேட்டை சேர்ந்தவர் சண்முகம். ஐ.ஆர்.பி.என். பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தற்போது 4 வயதில் கவின் என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

இதனால் அவர்கள் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து விவாகரத்து கேட்டு புதுவை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்தநிலையில் கவிதா நேற்று தனது மகன் கவின் மற்றும் சகோதரர் முத்துவுடன் தூய்மான் வீதியில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு அவர் தனது குழந்தை கவினுடன் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கவிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்சினை தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் அளிக்குமாறு தெரிவித்தனர்.

அதன்பின் கவிதா தனது மகன் மற்றும் சகோதரருடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ராவை சந்தித்து புகார் அளித்தார்.

மிரட்டல்

இந்த போராட்டம் குறித்து கவிதா கூறும்போது, எனது கணவர் சண்முகமும் அவரது உறவினர்களும் மிரட்டுவதாகவும் இதுதொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Next Story