கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க கோரி தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம்


கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க கோரி தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2020 11:22 PM GMT (Updated: 12 Oct 2020 11:22 PM GMT)

கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிலுவை தொகையை வழங்க கோரி தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமையல் செய்து நள்ளிரவுக்கு மேலும் அங்கேயே இருந்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலைக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கரும்புகள் கொடுத்து வருகின்றனர். இந்தக் கரும்புகளுக்கு உரிய விலையை சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்குவது வழக்கம். அவ்வாறு கடந்த 2018- 2019 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட கரும்புகளுக்கு தற்போது வரை உரிய விலையை கொடுக்கவில்லை. இதுவரை சுமார் ரூ. 24 கோடி விவசாயிகளுக்கு நிலுவை தொகையாக உள்ளது.

காத்திருப்பு போராட்டம்

பலமுறை விவசாயிகள் இதுகுறித்து மனுக்கள் கொடுத்தும் சர்க்கரை ஆலை நிர்வாகம் அந்த நிலுவை தொகையை வழங்கவில்லை. இதனை தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சிலர் கரும்புகளுடன் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா முன்னிலை வகித்தார். நதிகள் இணைப்பு சங்க மாநிலச் செயலாளர் ஜாகிர் உசேன், துணைத் தலைவர் செந்தில்குமாரசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் புன்னைவனம், மாவட்ட விவசாய சங்க பொதுச்செயலாளர் பீமராஜா, விருதுநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்கள் கண்ணையா, அம்மையப்பன், ராஜபாளையம் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோதண்டம் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுடன் தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், தாசில்தார் சுப்பையா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள் தங்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்காமல் இங்கிருந்து போக மாட்டோம் என்று கூறினார்கள். இதன் பிறகு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அந்த விவசாயிகளை அழைத்து பேசினார். அப்போதும் விவசாயிகளுக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

சமையல் செய்தனர்

மாலை 5 மணிக்கு போராட்டம் நடைபெற்ற இடத்தில் விவசாயிகள் அடுப்பு வைத்து சமையல் செய்தனர். அந்த இடத்தைவிட்டு யாரும் செல்லவில்லை. மீண்டும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை அங்கேயே தொடர்ந்தனர். நள்ளிரவுக்கு மேலும் போராட்டம் நீடித்தது.

Next Story