வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி போராட்டம் சித்தி விநாயகர் கோவிலுக்குள் நுழைய முயன்ற பா.ஜனதாவினர் கைது


வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி போராட்டம் சித்தி விநாயகர் கோவிலுக்குள் நுழைய முயன்ற பா.ஜனதாவினர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2020 9:16 PM GMT (Updated: 13 Oct 2020 9:16 PM GMT)

மும்பையில் சித்தி விநாயகர் கோவிலுக்குள் நுழைய முயன்ற பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பிரச்சினை காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் நேற்று மாநில மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தரேகர் தலைமையில் பா.ஜனதாவினர் மும்பை பிரபா தேவி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோவில் முன் போடப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பை மீறி அதற்குள் நுழைய முயன்றனர்.

பா.ஜனதாவினர் கைது

இதையடுத்து போலீசார் பிரவின் தாரேகர், பிரசாத் லாட் உள்ளிட்ட 30 பா.ஜனதாவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்தநிலையில் போராட்டம் குறித்து பிரவின் தாரேகர் கூறுகையில், “வீட்டுக்கு டெலிவிரி செய்யும் வசதியுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மன அமைதிக்காக செல்லும் கோவில்களை திறப்பது பற்றி யார் யோசிக்க போகிறார்கள்?. அகங்காரத்தால் நிறைந்து உள்ள இந்த அரசு கோவில்களை நம்பியே வாழும் சிறு வியாபாரிகளை பற்றி நினைக்கவில்லை” என்றார்.

Next Story