தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு


தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 Oct 2020 11:05 PM GMT (Updated: 13 Oct 2020 11:05 PM GMT)

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நீக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

சென்னை,

தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சட்டசபைக்குள் கொண்டு சென்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபை உரிமை மீறல் குழு 2-வது முறையாக கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உரிமை மீறல் குழு நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சட்டசபை செயலாளர், உரிமை மீறல் குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், “உரிமை மீறல் குழு என்பது சட்டசபையின் ஒரு அங்கம். இந்த குழுவின் நடவடிக்கைகளுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு உள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இடைக்கால தடையை நீக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மீண்டும் அணுகலாம்

இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், தமிழக அரசின் சிறப்பு மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு 4 வாரத்துக்குள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால தடையை நீக்க முடியாது. அதே நேரம், அந்த தடையை நீக்கக்கோரி தனி நீதிபதியிடம், சட்டசபை செயலாளர், உரிமை மீறல் குழு மீண்டும் அணுகலாம். அதற்கு இந்த மேல்முறையீட்டு மனு தடையாக இருக்காது” என்று உத்தரவிட்டனர்.

Next Story