ஆசனூர் அருகே அம்மன் சிலையை அகற்றிய வனத்துறையினர் கிராமமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு


ஆசனூர் அருகே அம்மன் சிலையை அகற்றிய வனத்துறையினர் கிராமமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Oct 2020 12:22 AM GMT (Updated: 14 Oct 2020 12:22 AM GMT)

ஆசனூர் அருகே அம்மன் சிலையை வனத்துறையினர் அகற்றியதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி அருகே ஆசனூர் வனக்கோட்டத்தில் அரேப்பாளையம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் நடப்பட்ட கல்லில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அம்மன் போன்று ஒரு உருவம் தென்பட்டது. அந்த உருவத்தை கிராமமக்கள் பிசில் மாரியம்மன் என்று கூறி பூஜை நடத்தி வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோவில் வனத்தையொட்டி உள்ளதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் திறந்தவெளியில் இருப்பதால் கோவிலுக்கு வரும் பொதுமக்களை வனவிலங்குகள் தாக்கும் என்று கூறி, கற்சிலையை அகற்றுவது சம்பந்தமாக வனத்துறையினர் கிராமமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வனத்துறையினர், சிலையை அகற்றி கிராமமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினர்.

சிலை அகற்றப்பட்டது

இதனை ஒரு சிலர் மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒரு சிலர் ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேற்று அங்கு சென்று சிலையை அகற்றினர். இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதி கிராமமக்கள் அங்கு சென்று, சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட வனஅலுவலர் கே.வி.ஏ. நாயுடு தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வனத்துறையினர் கூறும்போது, ‘கோவில் கட்டுவதற்கு மற்றொரு இடத்தில் நிலம் ஒதுக்கி தருகிறோம். தற்போது உங்களின் கோரிக்கை பரிசீலனை செய்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story