தொடர் பண்டிகைகள் எதிரொலி பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை அதிகாரிகளுக்கு, எடியூரப்பா உத்தரவு


தொடர் பண்டிகைகள் எதிரொலி பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை அதிகாரிகளுக்கு, எடியூரப்பா உத்தரவு
x
தினத்தந்தி 14 Oct 2020 10:15 PM GMT (Updated: 14 Oct 2020 10:15 PM GMT)

தொடர் பண்டிகைகள் வருவதை தொடர்ந்து பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இங்கு தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், முதல்-மந்திரியின் கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி, பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், பெங்களூருவில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் மரண விகிதம் குறைந்துள்ளது என்று கூறினர்.

இதில் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

பரிசோதனைகள்

பெங்களூருவில் கொரோனா பாதித்தோருக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதியை பெற இடைத்தரகர்கள் மூலம் லஞ்ச பரிமாற்றம் நடப்பதாகவும், வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதாக பொய்யான கட்டண ரசீதுகளை பெற்று மோசடி செய்வதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தவறு செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருப்பவர்களின் உடல்நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஆன்டிஜென் பரிசோதனைகளை குறைத்து, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். பெங்களூருவில் கொரோனாவை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும்.

தீவிர நடவடிக்கைகள்

அடுத்து தொடர்ச்சியாக பண்டிகைகள் வருகின்றன. அதனால் அதிகாரிகள் பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பாதித்து குணம் அடைந்தவர்களையும் சிறிது காலம் வரை அவர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேசும்போது, “பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால், சமூக இடைவெளியை உறுதி செய்ய தனியாக விதிமுறைகளை வகுத்து வெளியிட வேண்டும். நகரில் தற்போது 525 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

கடினமாகிவிடுகிறது

இந்த கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், “கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரில் பலரின் தங்களின் செல்போனை அணைத்து வைத்துவிடுகிறார்கள். இதனால் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பது கடினமாகிவிடுகிறது. நகரில் தினமும் 47 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை 20 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நகரில் 4 மண்டலங்களில் மரண விகிதம் குறைந்துள்ளது“ என்றார்.

Next Story