மனைவி, மகளை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி: 3 வயது குழந்தை பரிதாப சாவு


மனைவி, மகளை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி: 3 வயது குழந்தை பரிதாப சாவு
x
தினத்தந்தி 15 Oct 2020 7:00 AM GMT (Updated: 15 Oct 2020 5:19 AM GMT)

தலைவாசல் அருகே மனைவி-மகள் மீது பெட்ரோலை ஊற்றி கொல்ல முயன்றதில் 3 வயது குழந்தை பரிதாப இறந்தனர்.

தலைவாசல்,

தலைவாசல் அருகே ஆறகளுர் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து, லாரி டிரைவர். இவருடைய மனைவி தெய்வானை (வயது 35). இவர்களுக்கு மோனிஷா (17) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மருதமுத்துவின் மனைவி, தனது மகளுடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டனின் மனைவியும், கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினருமான திவ்யா (27) என்பவரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த மருதமுத்து கையில் பெட்ரோல் கேனுடன் அங்கு வந்தார். அவர் அங்கு நின்று கொண்டிருந்த மனைவி-மகள் மீது பெட்ரோலை ஊற்றினார்.

அப்போது திவ்யாவும், அவரது 3 வயது மகள் தனுஸ்ரீயும் வீட்டின் வராண்டாவில் இருந்துள்ளனர். வீட்டின் வராண்டாவில் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்ததால் மருதமுத்து ஊற்றிய பெட்ரோல் அடுப்பின் மீது பட்டு அங்கும் தீப்பற்றியது. இதில் திவ்யாவும், அவருடைய 3 வயது குழந்தை தனுஸ்ரீ, மருதமுத்துவின் மனைவி தெய்வானை, மகள் மோனிஷா ஆகிய 4 பேர் மீதும் தீப்பிடித்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே பெட்ரோலை ஊற்றிய லாரி டிரைவர் மருதமுத்துவை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதமுத்துவை கைது செய்தனர்.

இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 3 வயது குழந்தை தனுஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

Next Story