‘இந்தி திரைப்பட தொழிலின் இடமாற்ற முயற்சியை சகித்து கொள்ள மாட்டோம்’ முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு


‘இந்தி திரைப்பட தொழிலின் இடமாற்ற முயற்சியை சகித்து கொள்ள மாட்டோம்’ முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 15 Oct 2020 9:29 PM GMT (Updated: 15 Oct 2020 9:29 PM GMT)

இந்தி திரைப்பட தொழிலை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியை சகித்து கொள்ள மாட்டோம் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.

மும்பை,

கொரோனா ஊரடங்கின் தளர்வாக சினிமா தியேட்டர்களை நேற்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இந்தி திரைப்பட தலைநகரமாக விளங்கும் மும்பையை உள்ளடக்கிய மராட்டியத்தில் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் அரங்குகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தியேட்டர்கள் திறப்பின் போது மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையின் போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

சகித்து கொள்ள மாட்டோம்

மும்பை நாட்டின் நிதி தலைநகரம் மட்டும் அல்ல. பொழுதுபோக்கு தொழிலின் தலைநகரமாகவும் விளங்குகிறது. பாலிவுட் திரைப்படங்கள் உலகம் முழுவதும் அனுபவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சமீப காலமாக இந்தி திரைப்படத்தின் நற்பெயரை கெடுத்து அதன் கதையை முடிக்கவும், இந்தி திரைப்பட தொழிலை வேறு இடத்துக்கு மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வேதனையை தருகிறது. இந்த முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டோம்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

உத்தரபிரதேசத்தில் திரைப்பட நகரம்

மும்பையில் பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு விசாரணை முகமைகள் கொண்டு விசாரித்து வருவதையும், சினிமா தயாரிப்பாளர்களை ஈர்க்க உத்தரபிரதேசத்தில் பிரமாண்ட திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று அந்த மாநில பா.ஜனதா அரசு சமீபத்தில் அறிவித்ததையும் மனதில் கொண்டு உத்தவ் தாக்கரே இவ்வாறு பேசியுள்ளார்.

இதற்கிடையே மராட்டியத்தில் சினிமா தியேட்டர்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும், பொழுதுபோக்கு தொழில் மாநில பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதால் தியேட்டர்களை திறக்க அரசு சாதகமான முறையில் செயல்படும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

Next Story