மும்பையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை


மும்பையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழை
x
தினத்தந்தி 15 Oct 2020 9:41 PM GMT (Updated: 15 Oct 2020 9:41 PM GMT)

மும்பையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

மும்பை,

மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் நகரில் லேசானது முதல் மிதமான மழையே பெய்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நகர் முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்தது.

குறிப்பாக தாதர் இந்துமாதா, கிங்சர்க்கிள், காலாசவுக்கி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது. எனினும் காலையில் பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடியத்தொடங்கியது. இதனால் நேற்று காலை ரெயில், பஸ் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. நேற்று பெஸ்ட் பஸ்கள் வழக்கம் போல இயங்கியதாக அதிகாாி ஒருவர் கூறினார்.

இதற்கிடையே கனமழை காரணமாக மும்பை பவாய் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது.

இன்றும் மழை

மும்பையில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நகர் பகுதியில் 10.6 செ.மீ. மழையும், மேற்கு புறநகரில் 5.8 செ.மீ. மழையும், கிழக்கு புறநகரில் 6.5 செ.மீ. மழையும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை நகர், புறநகர் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story