அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா: திருப்பூரில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா: திருப்பூரில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 18 Oct 2020 5:09 AM GMT (Updated: 18 Oct 2020 5:09 AM GMT)

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர்,

அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று காலை பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பிறகு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தொடக்க விழாவை முன்னிட்டு 11 பேர் கண் தானம் செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து நெருப்பெரிச்சல் பகுதியிலிருந்து மாற்றுக் கட்சியை சேர்ந்த 100 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் கட்சியின் சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து வருகிற 22-ந் தேதி திருப்பூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் கருணாகரன், கண்ணன், பழனிசாமி, பட்டுலிங்கம், கணேஷ், பாசறை செயலாளர் லோகநாதன்,15 வேலம்பாளையம் கூட்டுறவு சங்கத்தலைவர் வி.கே.பி.மணி, தகவல்தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் கணேஷ், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் சிவாசலம், பல்லடம் நகர துணை செயலாளர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் எஸ்.பி.என். பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், சடையப்பன், கண்ணபிரான், ஷாஜகான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. 49-ம் ஆண்டு தொடக்கவிழா நேற்று சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் அவினாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.

அவினாசி ஒன்றிய குழு தலைவர் அ.ஜெகதீசன், அவினாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி, ஆகியோர் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அவினாசி வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் என்.சின்னக்கண்ணு, ஒன்றிய விவசாய அணி துணைத்தலைவர் பி.தங்கவேல், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி, சேவூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், கிளை செயலாளர் எஸ்.மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலத்தூர் கே.பழனிச்சாமி, பொங்கலூர் விமலா செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு கே.கார்த்தி மற்றும் ஏ.பி.குப்புசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story