போலீசாருக்கு மிரட்டல் கடிதம் பெங்களூரு கோர்ட்டில் கிடந்த மர்ம பொருளால் வெடிகுண்டு பீதி மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


போலீசாருக்கு மிரட்டல் கடிதம் பெங்களூரு கோர்ட்டில் கிடந்த மர்ம பொருளால் வெடிகுண்டு பீதி மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Oct 2020 10:23 PM GMT (Updated: 19 Oct 2020 10:23 PM GMT)

பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் கிடந்த மர்ம பொருளால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. மேலும் 2 வழக்குகளில் இருந்து பின்வாங்க கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூருவில் நடந்த டி.ஜே.ஹள்ளி வன்முறை மற்றும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பான வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டுக்குள் நேற்று மாலை 5 மணி அளவில் ஒரு மர்ம பொருள் கிடந்தது. வயர்கள் அந்தப் பொருளுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் அந்த மர்மப்பொருளின் அருகில் ஒரு கடிதம் கிடந்தது. இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வெடிகுண்டு பீதியும் ஏற்பட்டது

இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அந்த மர்ம பொருளை கைப்பற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள்.

மிரட்டல் கடிதம்

அப்போது வயர்களுடன் வெடிபொருள் போன்ற மர்மப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அதில் பெங்களூருவில் நடந்த டி.ஜே.ஹள்ளி வன்முறை வழக்கு மற்றும் பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வரும் விசாரணையில் இருந்து பின் வாங்க வேண்டும.் இல்லையெனில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறி மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

தற்போது சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலான வழக்குகள் காணொலிக் காட்சி மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

பரபரப்பு

அப்படி இருந்தும் வெடிபொருள் போன்ற மர்ம பொருள் மற்றும் மிரட்டல் கடிதத்தை கொண்டு வந்து போட்டு சென்றது யார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து சிட்டி சிவில் கோர்ட்டு வளாகம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அங்கு வெடிகுண்டு போன்ற எந்த பொருட்களும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story