சமூக இடைவெளி, முககவசம் அணிந்து தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


சமூக இடைவெளி, முககவசம் அணிந்து தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 19 Oct 2020 10:59 PM GMT (Updated: 19 Oct 2020 10:59 PM GMT)

சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்ற அரசின் உத்தரவுகளை கடைபிடித்தாலே தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவையில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் ஊரக பகுதிகளில் கொரோனா குறித்த 5 நாள் விழிப்புணர்வு ஆட்டோ பிரசாரம் நெட்டப்பாக்கத்தில் கருணாலயம் கிராம நலச்சங்கம் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது.

மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குனர் சிவக் குமார் அறிமுக உரையாற்றினார். நிகழ்ச்சியில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆட்டோ பிரசாரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, கொரோனா தொற்று சமூகத்தில் எந்த பாகுபாடும் இன்றி அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெரிய பதவியில் இருப்பவர்கள், பணக்காரர்கள் என பலர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். ஒரு மனிதருக்கு ஆரோக்கியத்தை தவிர பெரிய சொத்து ஏதும் இல்லை என்பதை கொரோனா நமக்கு உணர்த்தியுள்ளது.

நான் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தபோதிலும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 17 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டு இருந்தேன். என்னால் என் குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என கவனத்துடன் இருந்தேன். வெளியில் செல்லும்போது முககவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற அரசு உத்தரவுகளை கடைபிடித்தாலே தொற்று பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

தொற்று அறிகுறி

நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அனிஷ் அண்ட்டோ சேவியர் பேசும்போது, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தொற்றின் ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டாலும்கூட பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவேண்டாம், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வாருங்கள் என்றார்.

நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர் பேசுகையில், கொரோனா விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது. பொதுமக்கள் அரசு சொல்லும் அறிவுரைகளை பின்பற்றி நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், கருணாலயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன், கள விளம்பர உதவியாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story