ஈரோட்டில் குடும்பத்தகராறில் பயங்கரம் பெட்ரோல் ஊற்றி கணவர் எரித்துக்கொலை மனைவியும் தற்கொலைக்கு முயற்சி


ஈரோட்டில் குடும்பத்தகராறில் பயங்கரம் பெட்ரோல் ஊற்றி கணவர் எரித்துக்கொலை மனைவியும் தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 20 Oct 2020 8:34 PM GMT (Updated: 20 Oct 2020 8:34 PM GMT)

ஈரோட்டில் குடும்பத்தகராறில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த மனைவியும் தற்கொலைக்கு முயன்றார்.

ஈரோடு,

ஈரோடு ராசாம்பாளையம் வில்லரசம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). தறிப்பட்டறை தொழிலாளி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி (34) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி திவ்யா (11) என்ற மகள் உள்ளாள். கணவரை விட்டு பிரிந்த லட்சுமி, சுதாகரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சுதாகருக்கும், லட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்கள் வாக்குவாதம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சுதாகர் வீட்டில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து தீயணைப்பு படை வீரர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுதாகர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும், வீட்டிற்குள் லட்சுமி மயங்கிய நிலையில் கிடந்தார்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே தகவல் கிடைத்து அங்கு சென்றிருந்த வீரப்பன்சத்திரம் போலீசார், லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசார் அக்கம் பக்கத்தில் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சுதாகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும், அப்போது வெளியான புகையில் லட்சுமி மயக்கமடைந்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. மேலும், லட்சுமி மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

எரித்து கொலை

இந்தநிலையில் நேற்று காலை லட்சுமிக்கு சுயநினைவு திரும்பியது. இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் தனது கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த விவரம் வருமாறு:-

சுதாகருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு செல்வார். அப்போது கணவன்-மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சுதாகர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கணவரின் தொந்தரவை தாங்க முடியாமல் தவித்து வந்த லட்சுமி, அவரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து மகள் திவ்யாவை வீட்டில் இருந்து வெளியே அனுப்பினார்.

தற்கொலை முயற்சி

வீட்டின் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு சுதாகரின் மீது லட்சுமி பெட்ரோலை ஊற்றினார். பிறகு ஒரு துணியில் தீயை பற்ற வைத்து அவர் மீது வீசினார். இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. உடல் கருகிய சுதாகர் அங்கேயே கருகி பிணமானார். மேலும், லட்சுமியும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டில் குடும்பத்தகராறில் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்று மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story