பவானியில் கனிமவள அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை 100 பவுன் நகை சிக்கியது


பவானியில் கனிமவள அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை 100 பவுன் நகை சிக்கியது
x
தினத்தந்தி 21 Oct 2020 9:05 PM GMT (Updated: 21 Oct 2020 9:05 PM GMT)

பவானியில் உள்ள கனிமவள இணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 100 பவுன் நகை சிக்கியது.

பவானி,

திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை இணை இயக்குனராக பெருமாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.1½ லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும், இணை இயக்குனர் பெருமாளின் வீடு ஈரோடு மாவட்டம் பவானி கவுண்டர்நகர் பகுதியில் உள்ளது. அவரது வீட்டில் சோதனை நடத்த ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்படி ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் போலீசார் நேற்று மதியம் 2 கார்களில் பவானிக்கு விரைந்தனர். அங்கு பெருமாளின் வீட்டில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினார்கள்.

100 பவுன் நகைகள்

வீட்டில் உள்ள பீரோக்கள், பாதுகாப்பு பெட்டிகள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டு இருந்த பொருட்களை எடுத்து போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டில் பெருமாளின் மனைவி எழிலரசி இருந்தார். போலீசாரின் இந்த திடீர் சோதனையில், வீட்டில் இருந்த 100 பவுன் நகைகள் சிக்கியது. இந்த நகையை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், எழிலரசியிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். மாலை 6 மணி வரை இந்த சோதனை நடந்தது.

எழிலரசி பவானி அருகே தளவாய்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story