மத வன்முறையை தூண்டியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ்


மத வன்முறையை தூண்டியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ்
x
தினத்தந்தி 21 Oct 2020 9:31 PM GMT (Updated: 21 Oct 2020 9:31 PM GMT)

மத வன்முறையை தூண்டியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து நடிகை கங்கனா ரணாவத் இந்தி திரையுலகம் மீது பல குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார். இதேபோல அவர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியது, வேளாண் மசோதாவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. இதேபோல நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரன்கோலி ஆகியோர் இரு மதத்தினர் இடையே வன்முறையை தூண்டிவிடும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மும்பையை சேர்ந்த காஸ்டிங் இயக்குனரான சாகில் அஷ்ரப்அலி செய்யது பாந்திரா மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

வழக்குப்பதிவு

மனுவை விசாரித்த நீதிபதி, மதவாத மோதலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக பாந்திரா போலீசார் நேற்று தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரன்கோலி ஆகியோர் மீது கோர்ட்டு உத்தரவின் பேரில் இருபிரிவினர் இடையே மத வன்முறையை தூண்டுதல், வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இந்தநிலையில் அவர்களிடம் விசாரணை உள்ளோம்.

இதற்காக வருகிற திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இருவரும் போலீசில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story