வத்தலக்குண்டு அருகே விபத்தில் உயிரிழந்த பால் வியாபாரி உடல் உறுப்புகள் தானம் - கரூர் பெண்ணுக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது


வத்தலக்குண்டு அருகே விபத்தில் உயிரிழந்த பால் வியாபாரி உடல் உறுப்புகள் தானம் - கரூர் பெண்ணுக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது
x
தினத்தந்தி 22 Oct 2020 10:24 AM GMT (Updated: 22 Oct 2020 10:24 AM GMT)

வத்தலக்குண்டு அருகே விபத்தில் உயிரிழந்த பால் வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதில் கரூரை சேர்ந்த பெண்ணுக்கு, அவரது சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

வத்தலக்குண்டு,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 36). பால் வியாபாரி. இவர் கடந்த 18-ந்தேதி ரெட்டியபட்டி- கரட்டுப்பட்டி சாலையில் தண்ணீர் தொட்டி என்ற இடத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கருப்பையா கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கருப்பையா மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், கருப்பையாவின் குடும்பத்தினரை அழைத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட கருப்பையாவின் மனைவி மற்றும் உறவினர்கள், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக எழுதிக்கொடுத்தனர். இதைத்தொடர்ந்து கருப்பையாவின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இதற்கிடையே கரூர் மாவட்டம் சங்கிபூசாரியூர் பகுதியை சேர்ந்த வேணுகோபால் மனைவி ஜெகதாமணி (45) என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதுடன், 2 சிறுநீரகங்களும் செயல் இழந்தது. இதையடுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறுநீரகம் தானம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் மூளைச்சாவு அடைந்த கருப்பையாவின் சிறுநீரகத்தை ஜெகதாமணிக்கு பொருத்த தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த மாற்று அறுவை சிகிச்சையில் ஜெகதாமணிக்கு, கருப்பையாவின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இதன்மூலம் ஜெகதாமணி மறுவாழ்வு பெற்றார்.

Next Story