4 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


4 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2020 3:05 PM GMT (Updated: 22 Oct 2020 3:05 PM GMT)

4 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரி நேற்று தர்மபுரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரியில் இருந்து ஓசூர் வரை புதிய 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைய உள்ள இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அளவீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தர்மபுரி விருபாட்சிபுரம் பகுதியில் நேற்று விவசாய நிலங்களில் திரண்ட விவசாயிகள் புதிய 4 வழிச்சாலை பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய நியாயமான இழப்பீட்டை நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால் சாலை அமைக்கும் பணிக்காக நிலத்தில் தொடர் அளவீடு, எல்லை கல் அமைக்கும் பணி ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிலத்தில் இறங்கி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story