வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் - கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது


வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் - கலெக்டர் மலர்விழி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 22 Oct 2020 3:12 PM GMT (Updated: 22 Oct 2020 3:12 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். இதில் உதவி கலெக்டர் பிரதாப், வாக்காளர் பதிவு அலுவலர் தணிகாசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தேன்மொழி, தேர்தல் தாசில்தார் கனிமொழி மற்றும் தாசில்தார்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே அதிக வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்க வேண்டும். வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்பட்டால் புதிய வாக்குச்சாவடிகளை உருவாக்க வேண்டும். வாக்குச் சாவடிகளை சென்றடைய 2 கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் வாக்காளர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ள பகுதிகளை கண்டறிய வேண்டும். அத்தகைய பகுதிகளில் வாக்காளர்கள் கணிசமான அளவில் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வாக்குச்சாவடிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டன. இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்தார்.

Next Story